Monday, May 11, 2015

ஆழி மழை

ஐந்து வருடங்கள் கழித்து மாரியம்மன் கோவில் சாட்டுவதால் ஊரே ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சிறியவர்கள் பெரியவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. கோவில் சுவர்கள் நன்றாக வெள்ளை அடிக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு டுயூப் லைட் வெளிச்சத்தில் மிளிர்ந்தன. கோவில் முழுக்க மாவிலை தோரணமும் வாசலில் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

சாட்டு பூஜை தொடங்க நேரம் குறைவாக இருந்ததால் கோவில் பூசாரி வேகமாக மாரியம்மனை அலங்காரம் செய்துகொண்டிருந்தார். ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி வரிவசூல் விவரங்களை சரிபார்த்துக்கொண்டே இந்தவருடம் பெய்த கோடை மழையை சிலாகித்தும் பேசிக்கொண்டிருந்தனர்.

பறை அடிப்பவர்கள் பறையை தீயில் காட்டி சூடேற்றிக்கொண்டிருந்தனர். கந்தனும் அவர் பேரனும் ரோட்டோரத்தில் பனையோலையில் தீமூட்டி பறையை வார்பிடித்துக்கொண்டிருந்தனர். பேரனின் கால் தரையில் தங்கவில்லை. ஒருகால் மாற்றி ஒருகால் ஊன்றி நின்ற இடத்திலையே ஆடிக்கொண்டிருந்தான். பேரன் கந்தனின் மூத்த மகனின் பையன். கந்தனின் மகன் வேறு சாதிப்பெண்ணை மணந்து பொள்ளாச்சியில் இருந்தான்.
மகன் பாம்பு கடித்து இறந்து போக மருமகள் வீட்டில் சண்டையிட்டு பேரனை கந்தன் தன்னுடனே எடுத்து வந்து வளர்த்து வருகிறார். கடந்த ஆடி மாதம் முதல் அவன் பறை அடிக்க கற்றுக்கொண்டிருந்தான். மாரியம்மன் திருவிழாவில் தன் பேரன் பறையடிப்பதை பார்க்க கந்தனும் மிக ஆர்வமாக இருந்தார்.

ஊர் பெரியவர்கள் கூடி யார் கங்கணம் கட்டுவது யார் பூச்சட்டி எடுப்பது என அடுத்த ஏழு நாட்களும் நடக்க வேண்டிய விசயங்களைப்பற்றி விவாதித்தபடி இருந்தனர்.

மாரியம்மன் பொன்னாடை போர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தாள். பூசாரி கோவில் மணியை அடித்து கோவில் சாட்டு முறைப்படி தொடங்குவதை அறிவித்தார். கொஞ்சம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"சாமி, உங்க எல்லாருக்கும் தெரியும். நம்ம மாரியாத்தா கோயிலு அஞ்சு வருசமா சாட்லீங்க".

" நனைய கூட மழை இல்ல. கோயில் கெணத்துல தண்ணி இல்ல."

"ஆத்தா மனசெறங்கி இந்த வருசம் நல்லா மழபேஞ்சு நாடு செளிசிருக்குது சாமி "

"அதனால இந்த வருஷம் கோயில் சாற்றதுனு முடிவு பண்டிருக்குது சாமி "

பூசாரி பூஜை சாமான்களை தட்டில் வைத்தபடியே சொல்லி முடித்தார்.

"பறையடிக்கற பசங்கல்லாம் வாங்கப்பா" சத்தம் போட்டார் மயில்சாமி.

பறை சத்தம் விட்டு விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டது.

கந்தனும் அவர் பேரனும் ஆர்வமாக கோவில் வாசலில் பறையடிக்கும் கூட்டத்துடன் இணைந்து கொண்டனர்.

கூட்டத்திலேயே சிறுவனாக இருந்ததால் கந்தனின் பேரன் நடுவில் நின்று எல்லாரையும் சுற்றி சுற்றி பார்த்துகொண்டிருந்தான். அவனுக்கு ஆர்வம் பீறிட்டது.

"இவன யாருப்பா உள்ளுக்குள்ள உட்டது". கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

யாரும் பெரிதாக காதுகொடுத்து கேட்கவில்லை. கேட்டவர்களும் கண்டுகொள்ளவில்லை.

"அட அந்த பையன வெளிய போக சொல்லுங்கப்பா" இப்போது வேறு ஒரு குரல். கூட்டம் கொஞ்சம் அமைதியானது.

"யாருப்பா அது. என்ன சொல்றதா இருந்தாலும் கொஞ்சம் முன்னாடி வந்து சொல்லுங்கப்பா" மயில்சாமி சத்தமாக கத்தினார்.

"எந்த சாதிக்கரேன் வேணும் நாளும் பறையடிக்கலாம சாமி". குரல் மட்டுமே முன்னாடி வந்தது. உருவம் வந்திருக்கவில்லை.

"ஏய் என்னப்பா இது. சொல்லிகிட்டே இருக்கறேன். ஒழுங்கா என்ன சொல்லணுமோ சொல்லுங்க. கும்பம் தாழிக்க நேரமாகுது" மயில்சாமி கொஞ்சம் கடிந்து கொண்டார்.

"கந்தன் பேரன் பறை அடிக்கறத சொல்றாங்கபோல இருக்குது சாமி." முனகினான் சாமான்.

நிசப்தம் நிலவியது. சிலருக்கு புரிந்தும் சிலருக்கு புரியாமலும்.

"பையன் அப்பா நம்மாளுதான் ஆனா அவ அம்மா வேற சாதில"

"எவன்டா அவன் எவ பெத்தா என்னடா. ரத்தம் நம்ம சாதி ரத்தமுட"

கந்தனின் கால் நடுக்கம் கண்டது. கந்தன் கூட்டத்தினரின் கண்களையே பார்த்துகொண்டிருந்தார்.

இங்க பாருங்கப்பா. உங்க பிரச்சனைய பேச நேரமில்ல. பையன் கொழந்தபையன். பறை அடிச்சா அடிச்சிட்டு போறான் உடுங்க. இல்லீனா நீங்களே பேசி முடிவி பண்ணுங்க. நேரத்த கடத்தாதீங்க. இராசு பேசியவரே  இடுப்பில் கட்டிய துண்டும் நேர்த்தியாக நெற்றியில் பூசப்பட்ட விபூதியுமாக கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

பறையடிப்பவர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டனர்.கந்தன் செய்வதறியாது தனித்து நின்றுகொண்டிருந்தார். பேரன் ஏதும் புரியாதவனாய் பறையை தடவி தடவி பார்த்துக்கொண்டிருந்தான்.

இராசு அருகில் வந்து கந்தனின் தோளில் கையைபோட்டு நடக்க ஆரம்பித்தார்.

கந்தா இவனுக புரியாம பேசறானுக. குழந்தையும் தெய்வமும் ஒண்ணு. பச்ச மண்ணுக்கு ஏதுய சாதி.

இவனுகளுக்கு சொன்னா புரியாது. அஞ்சு வருசங்களுச்சு கோயில் சாட்டுது. எதுக்கு பிரச்சன. கம்முனு இரு. அடுத்தவாட்டி பாத்துக்கலாம்.

கந்தன் இராசுவின் காலில் நெடுக விழுந்து கதறினார்.

"சாமி இவன் அப்பனுக்கு பத்து வயசு இருக்கும்போதே உரிமையை ஆத்தா முன்னாடி அவனுக்கு  குடுதுட்டேன்னு ஊருக்கே தெரியும் சாமி. "

"அந்த நாய் ஊரவிட்டு போய் எவளையோ கட்டிக்கிட்டான். அந்த குத்தம்தானோ என்னவோ ஆத்தா அவன கூப்பிடுக்கிட்டா."

"எங்க பரம்பரை கொட்டு இல்லாம கோயில் சாட்டுனதே இல்ல சாமி."

கந்தன் தலையில் அடித்தவாரே கதறி அழுதபடியிருந்தார். பேரனும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான். இன்னும் பத்து பதினைந்து பேர் கூடினர். என்ன சொல்லியும் கந்தன் சமாதனம் அடையவில்லை.

கையை கூப்பி கோவில் பிரவாகத்தை நோக்கியவரே தரையில் படுத்து  கந்தன் அழுதபடியே இருந்தார். இராசு கையை பிசைந்தபடியே கோவிலை நோக்கி நடந்தார்.

பூஜை தொடங்கியதும் பறையடிக்கும் சத்தமும் வேட்டு சத்தமும் காதை பிளந்தது. யாரும் கந்தனையோ பேரனையோ கண்டுகொள்ளவில்லை.

மணி அடித்தவரே பூசாரி கோவிலை சுத்தி வந்தார். மாரியம்மனுக்கு பூஜை முடியும் நேரம் நடூர் லட்சமி கவுண்டச்சிக்கு சாமி வந்தது.

பழனி பண்டாரம் பூஜை தட்டு சாமான்களுடன் ஓடிவந்தார். ஊரே கன்னத்தில் போட்டுக்கொண்டது.

"பத்து வருசங்களுச்சு கோயில் சாட்டறோம். ஏதாவது குறை இருந்தா சொல்லு ஆத்தா".

 "ஏண்டா அஞ்சு வருசமா கோயில் சாட்டுல"

"மழை தண்ணி இல்ல. அப்பறம் எப்புடி கோயில் சாட்டுறது. ஆத்தாளுக்கு அபிஷேகம் பண்றதுக்கே வழி இல்லையே ஆத்தா".

"இந்த வருஷம் நல்ல மழை. அதான் உன்ன சந்தோஷப்படுத்த கோயில் சாட்றோம் ஆத்தா"

இராசு ஆத்தாவின் காலில் விழுந்தார்.

"தீட்டு இல்லாம பாத்துக்குங்கடா. அடுத்த வருஷமும் நல்லா மழை பேயும்"

ஒரே திரும்பி கந்தனையும் அவன் பேரனையும் பார்த்தது. கந்தன் அழும் சத்தம் கோயில் பிரவாகத்தில் பட்டு எதிரொலித்தது. ஆனாலும் மாரியாத்தாவின் காதில் மட்டும் ஏனோ விழவேயில்லை. ஆத்தா சம்பிரதாயங்களை முடித்து மலையேறினாள்.

பூஜை முடிந்ததும் சிலர் கூடி கந்தனை சமாதனம் செய்ய முயன்றும் கந்தன் கேட்கவில்லை. கோபத்தில் கத்த ஆரம்பித்தார். வெகுநேரம் ஆகியும் கந்தன் நீட்டி படுத்தபடியே அழுதுகொண்டிருந்தார். பேரன் கந்தன் அருகிலேயே படுத்து தூங்கிப்போனான்.

வடக்கே வானத்தில் மின்னல் எடுத்திருந்தது.

கூட்டம் கலைந்து சென்றது. சிலர் மட்டும் பாதி தூக்கமும் பீளை படிந்த கண்களுமாக கந்தனை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

இராசுவும் செய்வதறியாது வண்டியை எடுத்து கிளம்பினார். சிறிது தூரம் சென்றவர் வண்டியை நிறுத்தி மீண்டும் கோவிலை பார்த்தார். டுயூப் லைட் வெளிச்சத்தில் எல்லோரும் மங்கலாக தெரிந்தனர். அழுகை குரல் மட்டும் பிசிறில்லாமல் கேட்டது.

எழுந்து நின்ற கந்தன் கண்களை துடைத்தவாறே பேரனை எழுப்பினார். வேட்டியை மடித்து கட்டியவாறே பறையை பேரனிடம் கொடுத்து அடிக்க சொன்னான். தூக்கமும் அழுகையுமாக பேரன் நடுங்கியபடி நின்றுந்தான்.

கந்தன் விட்ட அரையில் பேரனின் கண்ணம் சிவந்தது. மயக்கம் வரும்போல் இருந்தது.

"இந்த அடிடா. வேகமா அடிடா". பறையை நீட்டியவாறே இருபுறமும் மீசையை தடவி விட்டார்.

மாரியம்மன் சிலையை பார்த்தவாரே கையை உயர்த்தி கும்பிட்டவர் ஏனோ வேகமாக காரித்துப்பினார். எச்சில் கோவில் சுவரில்பட்டு வடிந்தது.

பேரன் பறையை அடிக்க இவர் ஆட ஆரம்பித்தார். ஒரு காலை மடக்கி ஒரு கையை தூக்கி  அவர் ஆடும் ஆட்டம் பேரனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தாலும் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மற்ற பசங்களை பார்க்க அழுகையும் பீறிட்டது.

கந்தன் உட்கார்ந்து எழுந்திருக்கும் பொழுது கேட்கும் முட்டியங்கால் சத்தம் பறை சத்ததிற்கு துணை இசையைபோல் இருந்தது.

மணி இரண்டு மூன்று இருக்கும். நேரம் போக போக ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். கந்தன் மற்றும் பேரனின் நிழல் மட்டும் கோவில் வாசலில் தன்னந்தனியாக நின்றிருந்தது. பறை சத்தம் மென்காற்றில் கலந்து ஊரெங்கும் பரவியது. கந்தன் மண்டியிட்டு கைகளை ஊன்றியவாரே மீண்டும் அழ ஆரம்பித்தார். பேரன் அயர்ந்து சோர்ந்து பறையின் மீது தலைவைத்தவாரே தூங்கிப்போனான்.

சிறிது நேரத்தில் கோடைமழை தூரல் போட ஆரம்பித்தது. கந்தனும் அவர் பேரனும் நகராமல் அதே இடத்தில இருந்தனர்.

உலகில் இருந்து தூக்கி  எறியப்பட்டு பிரபஞ்சத்தில் அனாதையை மிதக்கும் இரு உயிர்கள் போல மாரியம்மன் கோவில் வாசலில் இவர்கள் மட்டும்.

சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் பெரு மழை பெய்து ஓய்ந்தது. மழை மேகங்களை விளக்கி நிலவு எட்டிப்பார்த்தது. கந்தனையும் பேரனையும் காணவில்லை. மழை நீர் எங்கும் பரவியிருந்தது. அவற்றில் கோவிலின் மின்விளக்குகள் நனைந்துகொண்டிருந்தன.

கோபுரத்து விளக்கு விட்டு விட்டு எரிந்தது. வாசலில் கட்டியிருந்த வாழை மரங்கள் மழைக்காற்றில் தூக்கியெரியப்பட்டிருந்தன.

காலையில் கோவிலுக்கு புறப்பட்ட ராசு வரும் வழியில் ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள கந்தனின் வீட்டுக்கு வண்டியை விட்டார். நன்றாக பனைஒலையில் வேயப்பட்ட அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இராசு பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லை. வீட்டின் பின்புறம் இருக்கும் கட்டுதாரையை பார்த்தார். ஈன்று இரண்டு மாதமே ஆனா மாட்டுக்கன்று, ராஜபாளையம் வம்ச நாய், கோழி அடைக்கும் குடாப்பு என்று எதுவுமே இல்லை.

கந்தன் ஊரையே காலி செய்திருந்தார். இராசுவின் மனம் வெம்பியது. பூவரசன் மரத்தடியில் தலை கவிழ்ந்தவாரே நின்றார்.கந்தனின் அழுகை குரல் மட்டும் காதில் விடாது ஒலித்துகொண்டே இருந்தது. கண்களில் நீர் முட்டி முட்டி நின்றது.

செல்போன் மணி அடித்தது. திடுக்கிட்டவர் செல்போனை அணைத்து மீண்டும் வீட்டை ஒருமுறை பார்த்தார்.

தலையை ஆட்டி தனக்குத்தானே சமாதனம் செய்தவாரே வண்டியை கிளப்பினார். பள்ளி வேன், பத்தானம்பர் பஸ், தாளக்கரை மணல் வண்டி, மெக்கானிக் ரவி என பலவும் இவரை கடந்து சென்றன.

ராசுவின் பஜாஜ் பைக்கின் ஸ்பீடோ மீட்டர் முள் எழுபதை தாண்டியது.

செல்போன் மணி மீண்டும் அடித்தது.  செல்போன் ரிங்க்டோனில் கந்தனின் அழுகை குரல் மெல்ல மெல்ல கரைந்துபோனது.

மழை ஈரத்தில் புதிய கோரைகள் முளைவிட்டிருந்தன.

Sunday, February 1, 2015

சாமமேடு

கொண்டக்கருப்பன் கொலை நடந்து நான்கு நாள்கள் ஆகிவிட்டது. அவன் சாமமேட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்த விசயத்தைபற்றிதான் ஊர்முழுக்க பேச்சாகயிருந்தது.

கொண்டக்கருப்பன் தாளக்கரையில் பெரிய ராவுடியாக இருந்தவன். ஊருக்குள் அவனை எதிர்க்கும் ஒரே ஆள் வாத்தியார் மகன் மட்டுமே. ஆனாலும் அவனுக்கு குடும்பம், சொந்தபந்தம் ஏதும் இல்லை.

கண்ணப்பன் இரண்டு நாட்களாக பசி தூக்கம் அற்றவாரக அலைந்துகொண்டிருந்தார். கொண்டக்கருப்பன் கொலைசெய்யப்பட்ட இடத்திக்கு அருகில்தான் இவரது காடும் இருக்கிறது.

கொலை நடந்த அன்று கண்ணப்பன் வேட்டைக்கு சென்றிருந்தார். மணி அதிகாலை மூன்றுக்கு மேல் இருக்கும். இவர் டாங்கி மேட்டை தாண்டி வரும்பொழுதுதான் ஒரு முயல் கண்ணுக்கு தட்டுப்பட்டது. ரோட்டைத்தண்டி வந்து ஆளாம்பளத்தார் காட்டுக்குள் ஓடிய முயலை தொரத்தி கம்பிவலையை வீசி பிடிப்பதற்குள் இவருக்கு மூச்சுமூட்டியது.

குடிக்க தண்ணீர் இருக்குமா என்று தேடியபோதுதான் மணல் வண்டி கண்ணில் பட்டது. எருதுகள் பூட்டியிருந்தது. அவை அமைதியாக அசைபோடுக்கொண்டிருந்தன. மணலில் இருந்து தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு முன்புதான் மணல் ஏற்றியிருக்க வேண்டும். வண்டி யாருடையதென்பது பூட்டியிருக்கும் எருதுகளை பார்த்ததுமே தெரிந்தது. லைட்டை அங்கும் இங்கும் அடித்துப்பர்த்தார். யாரையும் காணவில்லை.

இங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழி இவருக்கு பழகியது என்பதால் லைட்டை அடிக்காமலையே நடந்தார். லைட்டை கண்டால் பக்கத்து பட்டிநாய்கள் வேறு ஊளையிட ஆரம்பிக்கும்.

இவர் சாமமேட்டில் ஏறியபோது கிழக்கில் இருந்து கொண்டக்கருப்பன் பாடிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. அவன் போதையில் இருப்பது அவன் குரலிலயே தெரிந்தது. அவனிடம் பேச்சு கொடுத்தால் விடிந்துவிடும் என்பதால் இவர் கடவுத்தரம்பை நீக்கி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார். சென்றவர் முயலை இங்கேயே உரித்துவிட முடிவுசெய்து அங்கேயே உட்கார்ந்து உரிக்க ஆரம்பித்தார்.

தீடிரென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. எழுந்து பார்பதற்குள் "அய்யோ" என்ற சத்தம் பீறிட்டது.

"எவன் வீட்டு கதவ எவன்டா தற்றது? சாவுட என ***** மவனே" என்ற குரல் மட்டும் கேட்டது.

மங்கலான வெளிச்சத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை. இவர் நகராமல் திடிக்கிற்று நின்றபடியிருந்தார்.

அய்யோ அய்யோ என்ற மரணவலியின் குரல் மட்டும் மாறி மாறி கேட்டது. இவர் கைகள் முன்னமே நடுங்க ஆரம்பித்திருந்தன. பதட்டம் கூடியிருந்தது.

 சில நிமடங்களில் எல்லாம் முடிந்துபோயிருந்தது. ஒருவன் மட்டும் வேகமாக ஓடினான். சிறிது தூரத்தில் முட்புதறில் கிடந்த சைக்கிளை எடுப்பதுபோல் சத்தம் கேட்டது. சைக்கிள் வேகமாக சென்றது. நிலவின் சிறு ஒளியில் நடந்தது எல்லாம் ஒரு கனவு போல் இருந்தது.

இவர் தயங்கித்தயங்கி வேலியோரம் சென்று எட்டிப்பார்த்தார். கொண்டக்கருப்பனின் சரீரம் சரிந்து கிடந்தது. இரத்த வாடை வீசியது. இருட்டில் குத்துப்பட்ட இடங்கள் சரியாகத்தெரியவில்லை. பாதி உரித்த முயலை கையில் பிடித்தவாறு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

விடிந்ததும் கொண்டக்கருப்பனின் கொலை தான் ஒரே பேச்சாக இருந்தது. கண்ணப்பன் யாரிடமும் இதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. கொலை செய்தது வாத்தியார் மகனின் ஆட்கள்தான் என்றும், இல்லை எரசனம்பளத்து ராமசாமின் ஆட்கள் தான் என்றும் பேசிக்கொண்டனர்.

நான்கு நாட்கள் கடந்து விட்டதால் தாளக்கரை சகஜ நிலைக்கு திரும்பியிருந்த்தது. கண்ணப்பன் நிம்மதியற்று இருந்தார். அவர் மனம் அந்த சம்பவத்தையே நினைத்திருந்தது.

மாட்டுக்கு தவிட்டுதண்ணி கட்டிகொண்டிருக்கும்போது தேவியின் பேச்சுக்குரல் கேட்டது.

"வா மாயவ. எங்க மேக்க போயிட்டு வர்ற"

"சாமி சுப்பாத்த கவுன்சிய்ய பாத்துட்டு வரேன் சாமி" கும்ப்பிட்டவாரே பதில் கூறினான் மாயவன்.

மாயவனின் குரலை கேட்டதும் கண்ணப்பனின் இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது.

கண்ணப்பன் கட்டுதாரையிளியிருந்து வீட்டுக்கு செல்லவும் மாயவன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

"சாமி." கண்ணப்பனை பார்த்து கும்பிட்டான் மாயவன்.

"மாயவன் எப்படியோ கொண்டக்கருப்பன் போய் சேந்துட்டான்." என்று பேச்சை ஆரம்பித்தார் தேவி.

"ஆமுகசாமி, யாரோ செஞ்சு போட்டணுக சாமி. கோழிகூபிட நேரத்தில் அவன் ராமன் காட்டு தடத்துல மேக்க வந்துருக்கான் சாமி"

"எவன் போட்டு குத்தி கொண்டுபுட்டாணுக சாமி." நின்று கொண்டே பதில் கூறினான்.

"நீயெங்க அன்னைக்கு ஊர்லதான் இருந்தையா." கண்ணப்பன் அவன் கண்களையே பார்த்துக்கேட்டார்.

"இல்லசாமி. நான் மணலுக்கு மொய்யானம்படுவ போய்ட்டேன் சாமி. டாங்கி மேடு வந்தேன், அந்த ஆர்டியோ வந்து வண்டிய புடிச்சுக்கிட்டான் சாமி. வண்டிய ஆபீசிக்கு ஓடிக்கிட்டு வர சொல்லிட்டான் சாமி."

"அப்பறம் காலைலதான் வந்தேன் சாமி."

"வண்டிய வெளியே எடுக்கத்தான் மேக்கால கவுண்டிச்சிகிட்ட பணம் கேட்டுட்டு வரேன் சாமி" என்றான்.

கண்ணப்பன் அவன் பதிலை வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் கண்களையே பார்த்துகொண்டிருந்தார்.

"எப்படியோ இனி உனக்கு தொல்லை இருக்காது. வண்டிய வண்டிய குருக்காட்டி தொள்ளபண்ட மாட்டான்." தேவி சொன்னார் காப்பியை ஆத்தியவரே.

"ஆமுகசாமி. நம்மள புடிச்சு தொள்ளபண்டுவான் சாமி." என்று சொன்னான் காப்பியை கையில் வாங்கியவரே.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தெக்காலச்சாலை ஆத்தா கையில் தடியை ஊனியவாரே வந்தார்.

"என்ன மாயவா இந்தபக்கம்?"

"சாமி." கும்பிட்டான் மாயவன்.

"சாமி மணல் வண்டி ஆர்டியோ ஆபீஸ்ல மாடிகிடுச்சு சாமி. வெளிய எடுக்க பத்தாயிரம் ஆகும் சாமி. சுப்பாத கவுன்சிய பாத்துட்டு வரேன் சாமி."

எல்லாருக்கும் லட்டு கொண்டுவந்து கொடுத்தார் தேவி.

"அட உக்காந்து சாப்புடு. நின்னு கிட்டே இருக்கற."

"பரவாயில்ல சாமி."

மாயவன் அந்த லட்டை சாப்பிடவே இல்லை. அதை கவனித்த தேவி, "ஏன் மாயவ, அட அத சாப்பிடு" என்றார் .

"இல்லசாமி சிறுசு இனிப்புனா நல்லா தின்பான் அதான் சாமி. " சொல்லிகொண்டே அதைவைக்க காகிதம் தேடினான்

மாயவனுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு இரண்டு வயது. மற்றொண்டு கைக்குழந்தை.

வீட்டுக்குள் சென்ற தேவி மேலும் இரண்டு லட்டுகளை மாயவன் கையில் கொடுத்தவர்,

"இத ஊட்டுக்கு கொண்டுபோ. கையில இருக்கறத சாப்பிடு" என்றார்.

அவன் அதையும் வாங்கி இடுப்பில் கட்டியிருந்த துண்டில் மடித்துகொண்டான்.

மாயவன் கிளம்பி வெகுநேரம் ஆகியும் கண்ணப்பன் எதுவும் பேசாமல் திண்ணையில் உட்கார்ந்தபடியே இருந்தார்.

தெக்காலச்சாலை ஆத்தா மாயவனைபற்றி கூறிக்கொண்டிருந்தார்.

"இவன் வைத்தில இருக்கும்போதே இவங்கப்பன் செத்து போய்ட்டான். இவங்கம்மா இவன் இக்கதுல வெச்சுகிட்டே கலப்புடுங்க வருவா".

"ரொம்ப நல்லவன் பாவம். அப்பாவி."

அவர் கூறி முடிப்பதற்கு முன்பாகவே தேவி ஆரம்பித்தார்.

"இவன் பொண்டாட்டிய பத்து நாளைக்கு முன்னாடி பாத்தேன். கொண்டக்கருப்பன் தெனூம் ராத்திரி தண்ணிய போட்டு வந்து கதவ தட்ரானு சொல்லி அழுதா."

ஏன் மாயவன் கிட்ட சொல்லவேண்டியது தானேன்னு கேட்டதுக்கு, அது எங்க சாமி போய் கேட்கும். பாவஞ்சாமி அந்த ஆம்பள. சொன்ன பொலம்பும் என்று கூறி அவள் கதறி அழுததாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

"எப்படியோ அந்த நாய் செத்து தொலஞ்சான். நல்லா இருக்கட்டும். இவன் வெடிய வெடிய மணல் வண்டி ஓட்டறான். பொண்டாட்டி கைக்குழந்தையோடஆடுமேயிக்கறா" என்று கூறியவாறே தெக்காலசாளை ஆத்தா கிளம்பினார்.

கண்ணபனுக்கு "எவன் வீட்டு கதவ எவன்டா தற்றது" என்ற குரல் மட்டும் அவர் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. திடுக்கிட்டவர். மாயவன் சென்ற பாதையே பார்த்தபடி இருந்தார்.

ஆம் கொலை செய்தது மாயவன் தான். ஆளாம்பலத்தார் காட்டில் நின்றது மாயவனின் வண்டி தான். கொண்டக்கருப்பனை குத்திவிட்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்றதும் மாயவன் தான். வேண்டும் என்றே ஆர்டியோவிடம் மாட்டியிருக்கிறான்.

முகம் வேர்த்து கொட்டியது. சடாரென்று எழுந்து கிழவரத்து தோட்டத்திற்கு நடக்க ஆரம்பித்தார் கண்ணப்பன்.

மனம் செய்வதறியாமல் தவித்தது. மாடுகளை மாத்திகட்டியவர் ஏரியில் ஏறி சாமமேட்டை நோக்கி பார்த்தார்.

மாயவன் தூரத்தில் புளிதி மண் பாதையில் வெறும் காலில்  நடந்து கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டு வழிந்தோடியது. கால்கள் கானல்நீரை மிதித்தபடி ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

"கண்ணப்பண்ணா" சுப்ரமணியின் குரல் கேட்டது.

"ஏன்பா, என்ன சாமமேட்ல யாரையுமே காணோம். போலீஸ் கீது ஒன்னையும் காணோம்." கண்ணப்பன் கேட்டார்.

"அங்க யாருன்னா இருக்க. ஒரு நாய் இல்ல." பதில் வந்தது.

"யார்னு தெருஞ்சுதா?".

"வாத்தியார் மகனோட ஆளுகதான் சொல்றாங்க. ஆனா கரக்டா யாருன்னு தெரியல."

"போலீஸ் நாய்வருதுனு சொன்னாங்க."

" ஆமாண்ண. நாய எறக்கி உட்டதும் வேலிக்குள்ள சிக்குன நாய் வெளிய வரதுக்குல்லையே பெரும்பாடபோச்சு. புடுச்சு வண்டிக்குல்லையே போட்டுக்கிட்டு போய்ட்டானுங்க." சொல்லிகொண்டே பீடியை பற்றவைத்தார் சுப்ரமணி.

"கூட இருந்தவன்லாம் சும்மா இருப்பானா மணி".

"அட ஏண்ணா, குடும்ப இருக்கிறவனுக்கே, செத்தா கூடி அழ ஆலகாணோம். இவனுக்கு யாருனா இருக்கா".

"அண்ணா ஆடு மசால் காட்டுக்கு போகுது. நான்போய் முடுக்கரேன். மானம் வேற கெலக்க ஏறிக்கிட்டு நிக்கிது" என்றவாரே சுப்ரமணி வேகமாக ஓடினார்.

கண்ணப்பன் ஏரி மீது நடக்க ஆரம்பித்தார். சூரியன் மேற்கே விழ ஆரம்பித்திருந்தது. கொக்குகள் கதிர் அரிவாளின் வளைவைபோல் சீராக சூரியனை கிழித்துக்கொண்டு பறந்தன.

கண்ணப்பன் மீண்டும் மாயவன் சென்ற திசையிலேயே பார்த்தார்.

மாயவன் இன்னும் நடந்துகொண்டிருந்தான். கையில் அந்த மூன்று லட்டு உருண்டைகளை பிடித்தவாரே.

அவன் கையில் இறுக பற்றிக்கொண்டு நடப்பது லட்டு உருண்டைகளை அல்ல. அவன் குடும்பத்தின் மூன்று உயிர்களை.

யோசித்தபடியே பனமரத்து நிழலில் உட்காந்தார்.

"பால் கறக்க நேரமாச்சு. மாட்ட புடிச்சுக்கிட்டு வாங்க" தேவியின் கணீர் குரல் கேட்டது.

எழுந்து மீண்டும் மாயவன் சென்ற திசையில் பார்த்தார்.மாயவன் வெயிலில் கரைந்து மறைந்திருந்தான்.

சாமமேடு மட்டும் காலத்தின் மௌன சாட்சியாக வெயிலை குடித்தவாறே சலனமற்று கிடந்தது. இவரைப்போலவே.

தேவியின் குரல் கேட்டு திடீர் என்று எழுந்தவர் உற்சாகமாக நடக்க ஆரம்பித்தார். மனது லேசாகி இருந்தது. குழப்பங்கள் ஏதுமில்லை. கண்கள் விரிந்தன. நன்றாக பசித்தது.

---

கிழக்கே கீழ்வானில் லேசான இடிச்சத்தம் கேட்டது. கார்மழை பெய்யக்கூடும்.

Thursday, January 29, 2015

காக்கை உட்கார பனங்காய் விழுந்த கதை

ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணம் இனிதே முடிந்தது. இது இந்தியாவிற்கு வெற்றியா தோல்வியா என்பதைவிடமோடியின் animatic/drama விஷயங்கள்தான் எல்லா சோசியல் மீடியாக்களிலும் வியாபித்திருக்கின்றன.

நமக்கு இந்த சந்திப்பின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் எதுவுமே தெரியாது என்றாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தல் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்தமுறை நாம் அவர்களிடம் கையேந்தவில்லை. மாறாக கைகுலுக்கினோம்.

ஒருவழியாக அணுசக்தி ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஆனால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பதில் என்ன உடன்பாடு எட்டப்பட்டது என்பதில் தெளிவில்லை.

சில முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெளுத்திடப்படுள்ளன. பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வர இவை உதவலாம்.

இதற்கு மோடி என்கிற மந்திரம் தான் காரணம் என்ற பிஜேபி'ன் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. காரணம் இந்தியாவின் ராணுவ பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியம் போல தோன்றுகிறது. காக்கை உட்கார பனங்காய் விழுந்த கதை தான் இது.

சீனாவின் வளர்ச்சி, அரபு வசந்தம், ரஷ்யா என அமெரிக்காவிற்கு பல நெருக்கடிகள் உள்ளன. ரஷ்யாவையும் அரபு நாடுகளையும் கட்டுப்படுத்தவே திட்டமிட்டு பெட்ரோல் டீஸல் விலையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குறைத்தன. அதன் தாக்கம் ரஷ்யாவில் மிக நன்றாகவே தெரிகிறது.

ஆப்கானில் உள்ள இயற்கை வளங்களை அள்ளிசெல்ல அமெரிக்கா போட்ட திட்டங்கள் வெற்றிபெறவில்லை. இருந்தாலும் அதன் ஒரு கால் இன்னும் அங்குதான் உள்ளது. கருங்கடல் மார்க்கத்தில் அமெரிக்காவின் வழி முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது. வான்வழி உட்பட.

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கும் சீனா ஆப்பு வைத்துவிட்டது. கவ்தர் (gwadar port) துறைமுகமும் சீனாவின் வசமே. அமெரிக்காவின் அடுத்த இலக்கு குஜராத்தின் கண்டல (kandla port) போர்ட் (இங்கிருந்து சுதந்திர காஷ்மீரின் வழியாக ஆப்கானை அடைவது).

சீனாவோ மிகக்குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்து மிக அதிக டாலர்களை கைவசம் வைத்துள்ளது. அது மேற்கத்திய நாடுகளை மிரட்டுகிறது. சீனா நினைத்தால் ஒரேநாளில் உலகின் 14 முக்கிய வங்கிகளை முடக்கமுடியும். 10 மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை செயலிழக்க செய்யமுடியம்.

அமெரிக்கா அஞ்சுகிறது. தானாக முன்வந்து நம்முடன் கைகோர்க்க தயாராகிறது.

அடுத்தமுறை மோடிக்கு ஒபாமா டீ போட்டு கொடுப்பார் என நம்பலாம்.

Saturday, January 10, 2015

கடவுள் வந்திருக்கிறார்

நான் எழுந்திருக்கும் போதே ஜெபியும் பாலாவும்  கிளம்ப தயாராகி இருந்தனர். மணி ஒன்பதுக்குமேல் இருக்கும்.

அண்ணா ஒரு 5 மினிட்ஸ்... நானும் வரேன் என்றேன்.

நீ கெளம்பி வரதுக்குள்ள கோவிலே சாத்தியிருவாங்க. நாங்க கெளம்பறோம் என்றார் ஜெபி.

பாலாவிடம் கண்ணடித்துவிட்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றேன்.

இன்று ஜனவரி ஒன்று என்பதால் நேற்றிரவு நன்றாக தூக்கமில்லை.

கோரமங்களா ப்போரம் மால் என சுற்றிவிட்டு வீடு திரும்புவதற்கு மணி மூன்றுக்குமேல் ஆகிவிட்டது. படுத்த உடனேயே பக்கத்துக்கு அப்பார்ட்மெண்டில் இருந்து ஒருவன் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும்   போலீஸ் வந்திருப்பதாகவும் சொன்னதால் உடனே பார்க்க சென்றுவிட்டதால் சுத்தமாக தூங்கவே  இல்லை.

வேகவேகமாக கிளம்பி கோவிலுக்கு சென்றோம். முன்பே பெரிய கியு நின்றிருந்தது. வைகுண்ட ஏகாதேசி என்பதால் கொஞ்சம் அதிக கூட்டம். ஒரு போலீஸ்காரர் கூட்டத்தை வரிசைப்படுத்திகொண்டிருந்தார்.

 என்னக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லையென்றாலும் இதுபோன்ற விசேச நாட்களில் தவறாமல் கோவிலுக்கு சென்றுவிடுவது வழக்கம். பெங்களூரில் உள்ள கோவில்களில் உள்ள சிறப்பே அங்கு அனைத்து மாநில பெண்களும் வருவார்கள் என்பதே. அதனால் நான் கடவுளை அதிகம் கண்டுகொள்வதில்லை.

என்னக்கு முன்னால் கியு  ஒரு வயதான அம்மா கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் நின்றது அந்த குழந்தையின் தாயக இருக்கவேண்டும்.

அவள கொஞ்சம் கீழ ஏறக்கிவிடுமா. எவ்வளவு நேரம் தூக்கீடே நிப்பே என்று கடிந்துகொண்டிருந்தார்.

என் செல்லம் கீழ எறங்காது. ஏண்டா குட்டி. கொஞ்சிக்கொண்டிருந்தர் அந்த அம்மா.

கோவிலுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டது. கூடவே கோவிந்தா கோவிந்தா என்ற கோசமும். தரிசனம் முடித்து வெளியே வரும் அனைவர் முகத்திலும் ஒரு சந்தோஷம். இந்த புது வருடம் மிகச்சிறப்பாக இருக்கு என்ற நம்பிக்கை.

எத்தனை மனிதர்கள். அவரவர்களின் வாழ்க்கை கஷ்ட நஷ்டங்கள். நம்முடைய பிரச்சனைகள் சக மனிதனால் தீர்க்கமுடியாது என்கிறபோது கடவுள் அல்லது கடவுள் என்கிற நம்பிக்கை தேவையாய் இருக்கின்றது.

சாமி சிலையை நெருங்க நெருங்க அந்த குழந்தை பாட்டியிடம் ஏதோ கேட்டுகொண்டே வந்தது. குழந்தையின் அம்மா குழந்தையை திட்டிகொண்டே இருந்தார்.

நான் கொஞ்சம் கிட்ட நெருங்கி நின்றுகொண்டேன்.

அம்மாயி அம்மாயி சொல்லு. இன்னைக்கு எதுக்கு கோயிலுக்கு வந்திருக்கோம். அன்னைக்கு தான வந்தோம். 

இன்னைக்கு வைகுண்ட ஏகதேசி மா செல்லம். இன்னைக்கு கோவிலுக்கு வந்த சாமி நம்ம கூடவே வீட்டுக்குவரும். நல்ல சாமி கும்பிடு தங்கம்.

அவர்கள் மிக சிரத்தையாக சாமி கும்பிட்டனர். நானும் சாமி கும்பிட்டேன். ஆனாலும் மனம் வெளியில் கொடுக்கப்படும் பொங்கலையே நினைத்திருந்தது.

பொங்கலும் கையுமாக கோவிலுக்கு வெளியே ஜெபியும் பாலாவும்  வரட்டுமென காத்திருந்தேன்.
பாட்டி குழந்தையுடன் வெளியே வந்தார். குழந்தை மீண்டும் கேட்டது.

அம்மாயி சாமி வருமா.

ஆமாட தங்கம். சாமி கண்ணுக்கு தெரியாது. ஆனா கூடவே வரும்.

கிளம்ப ஆரம்பித்தவர் மீண்டும் இரண்டடி பின்னே வந்து கோவிலைப்பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டார். குழந்தையும் கூட.

அவர்கள் கிளம்பி சென்றனர். குழந்தை கோவிலை பார்த்தபடியே பாட்டியின் தோளில் சாய்ந்திருந்தது.

நானும் எல்லாப்புறமும் தேடினேன். கடவுள் வந்திருக்கவில்லை.

வந்திருக்கலாம்!!!