Wednesday, December 10, 2014

வாழ்த்துக்கள்!!!

ரஞ்சி டிராபியில் ஜம்மு & காஷ்மீர் மும்பையை தோற்கடித்தது என்பதுதான் இன்றைய  இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கிய செய்தி.

முதலில் நமது வாழ்த்துக்களை ஜம்மு & காஷ்மீர் டீமுக்கு தெரிவித்துக்கொள்வோம்.

இதையொட்டி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நிறைய விவாதங்கள்.மும்பையில் நல்ல வீரர்கள் இல்லை முக்கிய வீரர்கள் சோபிக்கவில்லை என. அதில் எனக்கு பெரிய அக்கறையில்லை.

இருமாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் மைதானம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அவர்களுக்கு பயிற்சி எடுக்கக்கூட மைதானம் இல்லை. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் போர்டிடமும் பெரிய பணபலமும் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அவர்கள் வென்றிக்கிறார்கள்.

இந்த வெற்றிச்செய்தி நாளைய  ஜம்மு காஷ்மீர் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வரலாம். தேர்தல் செய்திகளை தாண்டி இது முக்கிய இடம்பெரும் என நம்புகிறேன். கிரிக்கெட் பிரியர்களும் இளைஞர்களும் இதைப்பற்றி பேசலாம்.

கிரிக்கெட். இந்தியாவில் அரசியில் சினிமாவை தாண்டி அதிகம் பேசப்படும் பார்க்கப்படும் விஷயம். இந்தியாவை இணைக்கும் ஒரு முக்கியமான கருவி. அந்த சங்கமத்தில்  ஜம்மு காஷ்மீர் இணைவது மிகவும்  நல்ல விஷயம். அவசியமும் கூட. பர்வேஸ் ரசூல் இந்திய அணியில் இடம்பெற்றதை இதனுடன் பொருத்திப்பார்க்கலாம். அவர் நல்ல வீரரா இல்லையா என்பதை விட தேசிய அணியில் இடம்பெற்றதே பெரிய விஷயம். ஒரு வீரராவது  இந்திய அணியில் நிரந்த இடம்பிடிக்க வேண்டும்.

ஜம்மு கஷ்மீரில் ராணுவ ஊழலும் பிரிவினைவாதிகள் என்ற பெயரில் இயங்கும் அரசியல்வாதிகளையும் பழமைவாதிகளையும் தாண்டி அவர்கள் இந்தியாவுடன் கைகோர்த்து நடக்க கிரிக்கெட்டும் கூட உதவலாம். இப்போதைக்கு காங்கிரஸ் என்ற சொல்லைத்தாண்டி இந்திய முழுக்க அனைவருக்கும் தெரிந்த வார்த்தை என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டினால் என்ன நன்மை என்று கேட்டால் எதுவும் இல்லைதான். ஆனாலும் அது நமது சுவாசத்தில் கலந்த ஒன்று.

அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இது வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். தொழில் செய்ய படிக்க விளையாட என மக்கள் வருவதும் போவதும் அதிகம் நிகழ வேண்டும். அதற்கு நிலைமை இன்னும் நிறைய மாறவேண்டும். அரசியல் தளத்தை தாண்டி மற்ற எல்லா தளங்களிலும் மாற்றம் அவசியம்.

 கடந்த பட்ஜெட்டில் ஜம்மு கஷ்மீரில் ஐஐடி அமைக்கப்போவதாக மத்தியரசு அறிவித்துள்ளது. அதைப்போலவே வடகிழக்கு மாநிலங்களுக்கும் சாலைகள் அமைக்க அதிக நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. ரயில் வசதிகளும் அமைய இருக்கின்றன. இதெல்லாம் தான் இணைப்பு பாலங்கள்.

பொறுத்திருந்து பார்போம். மீண்டும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிக்கு நமது வாழ்த்துக்கள்.





Monday, December 8, 2014

பசித்திருக்கும் புலி

அவர்கள் பந்திபூர் வந்து இறங்கியபொழுது நல்ல குளிர். பனிக்காலம் என்பதால் மணி ஆறு ஆகியும் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. சரவணனும் அசோக் சாரும் தம் பற்றவைக்க ஆரம்பித்தனர்.

ராம் இரு கைகளையும் இறுக்கமாகக்கட்டி நின்று கொண்டிருந்தான். குளிரின் நடுக்கத்தில் அவன் உதடுகள் துடித்தன. மூடுபனி அவனை போர்வைபோல் போர்த்தி இருந்தது.

பந்திபூர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் நீட்சி. அடர்ந்த வனம். புலிகள் சிறுத்தைகள் யானைகள் அதிகம் வசிக்கும் பகுதி. வனத்துறையின் சார்பில் தினமும் இருமுறை சபாரி அழைத்துச்செல்கிறார்கள். வார இறுதி என்பதால் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.

6:15 மணிக்கெல்லாம் சபாரி கிளம்பியது. எந்த விலங்கும் கண்ணில் தென்படவில்லை. ஒரு இடத்தில் வண்டி நின்று ஒரு சிலர் மட்டும் இறங்கி  காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஓட்டுனரின் வாக்கி டாக்கி ஒலித்தது. புலி  ஒன்று பசியுடன் அலைவதாகவும் அது மனித மாமிசத்தை உண்ணக்கூடியது  எனவும் வனத்துறை அதிகாரி எச்சரிதுக்கொண்டிருந்தார்.

வண்டி கிளம்ப தயாரானது. அனைவரும் ஏறினர். அசோக்சார் மட்டும் பேன்ட் ஜிப்பை பாதி போட்டும் போடாமலும் சரவணன் கைகொடுக்க கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தபோது தான் அவரின் பேன்ட் கிழிந்திருந்தது தெரிந்தது. அவரின் இடது தொடைப்பகுதி நனைந்து இருந்ததை யாரும் கவனிக்கவில்லை சரவணனை தவிர.

எப்படியாவது அந்த புலி கண்ணில் மாட்டவேண்டும் என்று இராமச்சந்திரன் வேண்டிக்கொண்டே அனைத்து பக்கங்களிலும் தனது பார்வையை விரித்தபடி இருந்தான்.

சற்றென்று வண்டி நின்றது. ஓட்டுனர் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார். அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த புலி ஒரு மரத்தின் கிளையில். கொஞ்சம் பரபரப்பாகவே அதே சமயம் மிகுந்த பசியுடன் இருப்பது அதன் வயிற்றுபகுதியின் துடிப்பிலேயே தெரிந்தது.

போட்டோ கிளிக்குகளின் சத்தம் இடைவிடாமல் கேட்டது. ராம் ஐந்தாறு போட்டோக்கள் எடுத்தான். க்ளோசப் சாட் எடுப்பதற்கு ஜூம் செய்தபோது புலியின் கண்கள் பளீரென மின்னின. இவனும் பலமுறை புலிகளை பார்த்திருக்கிறான். ஆனால் அதன் கண்களை இவ்வளவு நெருக்கமாக கண்டதில்லை. 

அதன் கண்களில் பசியும் கோபமும் சோகமும்  மாறிமாறி வந்து போனது. இவன் கைகள் கேமரா பட்டனை அமுக்கவில்லை. புலியின்  கண்கள் இவனிடம் ஏதோ சொல்லவருவது போலவே தோன்றியது. அதையே பார்த்துகொண்டிருந்தான்.

 இவ்வளவு காலமும் எல்லாரையும் போலவே புலியின் கண்களில் வீரமும் யாரையும் சட்டை செய்யாத ஒரு தெனாவெட்டும் காமும் மட்டுமே தான் இருக்கும் என நம்பியிருந்தான. இல்லை அது உண்மையில்லை.

உண்மையில் அதன் கண்கள் நம்மிடம் பிச்சை கேட்கிறது. வாழவிடும்படி மன்றாடுகிறது. எஞ்சிருக்கும் அதன் சந்ததியை காப்பாற்ற கண்ணீர் வடிக்கிறது. நூறுவருடங்களுக்கு முன்பு இருந்த எந்த சந்தோசமும் வீரமும் மகிழ்ச்சியும் அதனிடம் இல்லை. ஒரு அகதியைபோல அள்ளாடுகிறது. மனிதர்கள் சொல்லும் புலியைப்பற்றிய வர்ணனைகள் முக்கால்வாசி கற்பனையே.

புலி மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. வண்டி கிளம்பியது. வரும் வழியில் சபாரி வண்டி செல்லும் பாதையை ஒரு மான் கூட்டம் கடந்து சென்றது. அதன் ஒய்யாரமான நடையை தமது கேமரா கண்களில் ரசிதுக்கொண்டிருன்தனர். ராமும் அதை தனது கேமராவில் படம்பிடித்துக்கொண்டான். இருந்தாலும் அவன் மனம் புலியின் நினைவாகவே இருந்தது.

அவர்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பியிருந்தபொழுது மணி பனிரெண்டாகியிருந்தது. வெயில் ஏறியிருந்தது. செல்போனை எடுத்தபொழுது அம்மாவின் மிஸ்டுகால்கள் கண்ணில் பட்டன. திருப்பி அழைத்தபொழுது அம்மா வழக்கமான விசாரிப்புகளை தாண்டி கல்யாண விசயத்திற்கு வந்தார். காங்கேயத்திலிருந்து புதிய இடம் வந்திருப்பதாகவும் அவர்கள் சரி என்று சொல்லிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். இவன் மனம் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. புலியின் பசித்த கண்கள்  மட்டுமே நினைவில் வந்துவந்து போயின. 

மதிய உணவு ஹாலில் சரவணன் தனது பழைய அனுபவங்களைப்பற்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். ஒரு சிலர் போட்டோக்களை எடிட் செய்துகொண்டும்  பேஸ்புக்கில் ஏற்றிக்கொண்டும் இருந்தனர். மீதிப்பேர் பீரும் சிகரட்டுமாக இருந்தனர். ராம் தான் எடுத்த  போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தான்.

அசோக் சார் ஒரு கையில் வோட்காவும் லேப்டாப்மாக வந்தார். சரவணனும் சாப்பிட தயாரானார். ராமின் லேப்டாபில் இருந்த மான் கூட்டத்தின் போட்டோவை பார்த்து, "எவ்வளவு அழகாக இருக்கு. எப்டி ரோட்ட கிராஸ் பண்ணுது பாருங்க" என்றார் அசோக் சார். சரவணன் மான்களை பற்றியும் அதன் வகைகளை பற்றியும் கூற ஆரம்பித்தார். ராம் மனதிற்குள் புன்னகைதுக்கொண்டான். யார் பாதையில் யார் செல்வது. காடு மானின் வாழ்விடம்.அது நமக்கானதல்ல.


ஒரு ரவுண்டு முடிந்திருந்தது. அசோக் சார் தனது பால்ய காதல் கதைகளை கூற ஆரம்பித்தார். பல முறை கேட்ட கதைதான் என்றாலும் ராமுக்கும் சரவணனுக்கும் வேறு வழியில்லை.

ராம் தன்முன் இருந்த வோட்க கிளாசில் ஐஸ்கியுபுகளை மிதக்கவிட்டான். ஐஸ் கட்டிகள் மின்னின. புலியின் கண்களை போலவே. மெதுவாக வோட்காவில் கரையத்தொடங்கின. 

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸ்கட்டிகள் கரைந்துபோகும். புலிகளும் அப்படியே. சிறிது காலத்தில் மறைந்து போகக்கூடும்.

ராமின் கண்கள் பனித்திருந்தன. அடுத்த ரவுண்டில் அதுவும் கடந்து போகும்.

Saturday, December 6, 2014

இங்கு எதார்த்தங்கள் விற்கப்படும்

சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது அம்மா கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போலாம்னு கூப்பிட்டாங்க. அங்கு எல்லாமே கிடைக்கும்னும் விலையும் குறைவுனும் சொன்னாங்க. எனக்கு அவங்க சொன்னத கேட்டதும் ஒரே ஆச்சரியம். என்ன நம்ம ஊருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எல்லாம் வந்துடுச்சானு.

எங்கள் ஊர் ஒரு சின்ன டவுன் என்பதால் சின்ன சின்ன மளிகைக்கடைகள்தான் இருக்கும். ஒரு சில வருடங்களுக்கு முன்புதான்  நெல்லைமுத்து போன்றவை கடைவிரிக்க ஆரம்பித்திருந்தன.

நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். முன் வாசலிலேயே இருவர் நின்று வரவேற்றுக்கொண்டிருந்தனர். இது ஒன்றும் நமக்கு புதுசு இல்லையென்றாலும் வந்ததில் பாதி பேர் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்ததாகவே நினைக்கிறேன்.நான்கு மாடி. அனைத்து பொருட்களும் இருந்தன.நிறைய ஆபர்களும் கொடுத்தார்கள். அம்மா வீட்டுக்கு தேவையான தேவையில்லாத எல்லா பொருட்களையும் வாங்கிகொண்டிருந்தார்கங்க. 

நான் சும்மா எல்லா இடங்களையும் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்பொழுது  ஒரு பெண் ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து எடுத்து பார்த்து கொண்டேயிருந்தார். அவருக்கு பிஸ்கட்டின் விலை அல்லது கலரை சொல்லியோ தான் வாங்கி பழக்கம் என்பது அவரின் முகத்தை பார்த்ததுமே புரிந்தது. கொஞ்சம் வயதானவர். அப்போது அங்கு வந்த கடை ஊழியர் அந்த பெண்ணுக்கு எல்லா பிஸ்கட்களின் விலை மற்ற விபரங்களை விளக்கி சொல்லிகொண்டிருந்தார். அந்த பெண் அந்த கடை ஊழியரையே "உங்களுக்கு புடிச்சத கொடுங்க!" என்றார். உடனே அந்த கடைஊழியர்  லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்களை ஒரு எண்பது ரூபாய்க்கு கொடுத்தார். உடனே அந்த பெண்ணும் "பேத்திகளுக்கு வாங்கிகிட்டு போறேன்!" என்று சொல்லிவிட்டு மிகுந்த சந்தோசமாக கிளம்பினார். அந்த கடை ஊழியரும் தனது லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்கள் விற்ற சந்தோசத்தை மற்றொரு ஊழியருடன் பகிர்ந்து கொண்டார் நான் இருப்பதை கவனிக்காமல்.

அந்த லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்கள் அந்த அம்மாவின் பேத்திகளுக்கு நிச்சயம் பிடிக்கப்போவதில்லை. அந்த அம்மாவிக்கோ ஏமாளி என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். என் மனதில் தோன்றிய கேள்வி ஒன்றே ஒன்றுதான். அடுத்தமுறை அந்த அம்மா இங்க டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வந்தா  எப்படி இந்த கடை ஊழியர்களை கையாளபோறாங்கனுதான். ஒன்னு இங்க வரவே மாட்டாங்க இல்ல அப்படி வந்தாலும் இங்க யாரு சொல்றதையும் கேட்க  மாட்டாங்க.

இது ஒரு சின்ன எடுதுக்காட்டுதான். இது நாள்வரைக்கும் கடைகாரர்கள் இது போன்று நேரடியாக வாடிக்கையாளர்களை ஏமாற்றியதில்லை.விலை கூடுதலாக சில சமயம் மிகவும் கூடுதலாக கூட இருக்கும். ஆனாலும் கிராமத்து மக்கள் கேட்பதை புரிந்துகொண்டு அவர்களின் பட்ஜெட்டையும் அனுசரித்து வியாபாரம் செய்தனர்.இருவருக்கும் இடையில் பரஸ்பரம் நல்ல நம்பிக்கை இருந்தது.

இந்த ஷாபிங் மால்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை எல்லாவற்றையும்  தேவையற்றதாகிவிட்டது. இனி இந்த நம்பிக்கைகள். காலாவதியாகிவிடும். கிராமத்து வெள்ளந்தி மனிதர்களும் தொலைந்துபோய் விடுவார்கள்.சுயநலம் மட்டுமே குறிக்கோள்.

டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களும் மால்களும் தவிர்க்கமுடியாததுதான். ஆனாலும் இன்னும் கொஞ்சக்கலாமாவது இவற்றை தவிர்க்கலாம். மீதமிறுகின்ற  அப்பாவி கிராமத்து மனிதர்களும் சுயநலவாதிகளா மாறும்வரை.  

சிறு குறு வியாபாரிகள் யாரும் இனி காலம் தள்ள முடியாது. மறைமுகமாக லோக்கல் மார்க்கெட்மூலகமாக இருந்த பண்ட மாற்று முறையும் இனி இருக்காது. ஒரு ஊரில் தக்காளி கூடைகூடையாக ஏற்றுமதி செய்யப்படும் மறுபுறம் அதே ஊரில் கடைகளில் தக்காளி தட்டுப்பாடும் இருக்கும்.

அம்மா கூப்பிட்டு எல்லா பொருளையும் சரிபார்க்க சொன்னாங்க. முக்கியமா ஆபர் எதாவது மிஸ் ஆயிருச்சான்னு. "பழைய அரசமரத்து கடக்காரன் எந்த ஆபாரும் கொடுக்கமாட்டான்னு"  திட்டிகிட்டு இருந்தாங்க. 

நான் சின்னப்பையனா அம்மாவோட ஒரு நாள் அந்த அரசமரத்து கடைக்கு போயிருந்தேன். அம்மா துவரம் பருப்பு கேட்டாங்க. கடைக்காரர் "புது பருப்பு வந்துருக்கு ஆனா மைசூர் பருப்பும் கலந்து இருக்குனு சொல்லீட்டு பக்கது கடைலபோய் வாங்கிக்கிட்டுவந்து கொடுத்தாரு".

அந்த அரசமரத்து  கடைகாரரின் சிரிப்பும் நோக்கமும்  இந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஊழியரின் சிரிப்பும் நோக்கமும் வெளித்தோற்றத்தில் ஒன்று போலவே இருந்தாலும் அதன் பின்னால் 40 வருட அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றம் ஒளிந்திருக்கிறது.

பில் செட்டில் செய்து கிளம்பும்பொழுது  ஸ்விட்ஸ் பலகாரங்கள் விற்கும் இடத்தில ஒரு போர்டு தொங்கிகொண்டிருந்து. அதில் "இங்கு பதார்த்தங்கள் விற்கப்படும்" என்று வாசகம் எழதியிருந்து.

நான் அங்கும் இங்கும் தேடி பார்த்தேன். எங்காவது  "எதார்த்தங்கள் விற்கப்படும்" என்ற வாசகம் தென்படுகிறதா என்று.